ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்

“கதர் உற்பத்தியின் நோக்கம், ஆலை உற்பத்தியாளர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சில கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து நவ நாகரீகமான கதராடைகளை தயாரித்து நகர்ப்புற மக்களுக்கு விநியோகிப்பது போன்றதல்ல. விவசாயத்திற்கு ஒரு துணை தொழிலாக இருக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். ஆனால் இது இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது. இதை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் இந்த தொழிலானது சுயசார்பானதாக செயல்பட வேண்டும் என்பதை நாம் உறுதி செய்திட வேண்டும். மேலும், அதன் வெற்றியை கிராமங்களிலும் உணரப்பட வேண்டும். கிராம மக்கள் எவ்வாறு தங்களது தேவைக்கு ரொட்டி அல்லது அரிசியை சமைத்துக் கொள்கிறார்களோ அதே போல தங்களது உபயோகத்திற்கு ஆடைகளை உற்பத்தி செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் அதனை விற்பனை செய்யலாம்."

- மகாத்மா காந்தியடிகள்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் கிராம வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கிராமப்பகுதிகளில் கதர் மற்றும் கிராமத்தொழில்களை அமைத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நிறுவப்பட்டது. கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்திடும் வகையில் தேவைக்கேற்ற இலாபகரமான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

வாரியத்தின் முக்கிய நோக்கங்களாவன:

  • கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த விற்பனையாகக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்தல்.
  • கிராமப்புற ஏழை மக்களிடையே சமூக உணர்வினை மேம்படுத்தி தற்சார்பு நம்பிக்கையினை வளர்த்தல்.
  • கிராமப்புற கைவினைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உற்பத்தி மற்றும் இலாபத் திறனை மேம்படுத்துதல்.
  • கதர் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்.